AMMK - Amma Makkal Munnettra Kazagam

This is an official YouTube account of Amma Makkal Munnettra Kazaham (AMMK) Providing latest news and announcements from AMMK.


AMMK - Amma Makkal Munnettra Kazagam

ஐந்து மாதங்களாகப் பணி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூய்மைப் பணியாளர் தற்கொலை – வாழ வழியின்றி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் பணி வழங்கப்படாததால், மன உளைச்சலுக்கு உள்ளான சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட 50வது வார்டு பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் திரு ரவிக்குமார் அவர்கள் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருக்கும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே தூய்மைப் பணியாளர் ஒருவர் மனமுடைந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்திலும், கொரோனோ போன்ற பெருந்தொற்று காலத்திலும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரையும், மாநகரின் சுகாதாரத்தையும் பேணிக்காத்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல் ஏற்றுக் கொள்ளமுடியாதது .

எனவே, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உரிய ஊதியமின்றியும், வாழ வழியின்றியும் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
#AMMK #TTV Dhinakaran

6 months ago | [YT] | 99

AMMK - Amma Makkal Munnettra Kazagam

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகம் சார்பாகப் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் சகோதரர் திரு.ஆர்.எம். செல்வம் அவர்களின் புதல்வன் திரு.புகழ் அவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களையும், புதல்வி செல்வி. இன்பா அவர்கள் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கும் செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்திருக்கும் இருவரும், அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் விளையாட்டு உலகின் உச்சம் தொட்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
#AMMK #TTV Dhinakaran

6 months ago | [YT] | 129

AMMK - Amma Makkal Munnettra Kazagam

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளின் (SIR) அடிப்படையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டம் மற்றும் தொகுதிவாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், தங்களின் பெயர்களை மீண்டும் இணைக்க, புதிய வாக்காளர்களைச் சேர்க்க, திருத்தப் பணிகளை மேற்கொள்ள வரும் ஜனவரி 18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரவர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை முழுமையாகப் பெற்று, தங்களின் பகுதிகளில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் எவரேனும் விடுபட்டிருந்தால் அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கும், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் அனைத்து விதமான உதவிகளையும் உடனிருந்து செய்திட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
#AMMK #TTV Dhinakaran

6 months ago | [YT] | 90

AMMK - Amma Makkal Munnettra Kazagam

பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தொடர் போராட்டம் - வாழ்வாதாரத்திற்காகப் போராடும் செவிலியர்களை அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தம் சாலையில் போராடியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள் இரவு முழுவதும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வான செவிலியர்களை உரிய நேரத்தில் பணி நிரந்தரம் செய்யத்தவறிய சுகாதாரத்துறையின் அலட்சியமே, காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின்னரும் விடிய, விடியப் போராட வேண்டிய சூழலுக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும், தங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காததோடு, சம வேலைக்குச் சம ஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் என செவிலியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் செவிலியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய நியாயமான கோரிக்கைகளை ஏற்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu

6 months ago | [YT] | 112